தக்வா உடையவராகுவோம்

தக்வா உடையவராகுவோம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ரமளான் சிந்தனைகள்
பிறை.... 11
தக்வா_உடையவராகுவோம்..

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ‏

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 49:13)

ஓர் இறைநம்பிக்கையாளரின் ஈருலக வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த இறையச்சம் தான். அல்லாஹ் தன் திருமறையில் சுமார் 70 இடங்களில் ”நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து வாழுங்கள்” என்பதாக முஃமின்களை நோக்கி கூறுகிறான்.

வணக்க வழிபாடு, சமூகம், பொருளாதாரம், தனிமனித வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, நீதி, நிர்வாகம், அரசியல், கொடுக்கல் வாங்கல் என மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிற அத்துனை துறைகளிலும் இறையச்சம் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும். இறையச்சமின்றி செய்யப்படும் அமல்கள் ஏற்கப்படாது.

لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ‌ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ‏

(குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)

وكتب عمر بن عبد العزيز إلى رجل: أوصيك بتقوى الله - عز وجل - التي لا يقبل غيرها، ولا يرحم إلا أهلها، ولا يثيب إلا عليها، فإن الواعظين بها كثير، والعاملين بها قليل،

உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் ஒரு மனிதருக்கு கடிதம் எழுதினார்கள். அதிலே இறையச்சத்தைக் கொண்டு நான் உனக்கு வஸிய்யத் செய்கிறேன். இறையச்சம் எப்படிப்பட்டது என்றால் இறையச்சமுள்ளவர்களின் அமல்கள் தான் ஏற்றுக்கொள்ளப்படும். இறையச்சமுள்ளவர்கள் மட்டும் தான் இறைவனால் அருள் செய்யப்படுவார்கள். இறையச்சம் உள்ளவர்களுக்குத் தான் கூலி வழங்கப்படும். இறையத்தத்தைக் கொண்டு உபதேசம் செய்யக் கூடியவர்கள் அதிகம். ஆனால் அதன்படி நடப்பவர்கள் மிகக்குறைவு என்று எழுதினார்கள்.

ஒருவருடைய மறைவுக்குப் பின்னால் அவரின் மண்ணரையில் அவருக்கு துணையாக இருப்பது இறையச்சமும் அதன் மூலம் செய்த அமல்களும் தான்.

دخل علي رضي الله عنه المقبرة فقال: يا أهل القبور ما الخبر عندكم: إن الخبر عندنا أن أموالكم قد قسمت وأن بيوتكم قد سكنت وإن زوجاتكم قد زوجت، ثم بكى ثم قال: والله لو استطاعوا أن يجيبوا لقالوا: إنا وجدنا أن خير الزاد التقوى)

ஒரு நாள் அலி ரலி அவர்கள் மண்ணறை இருக்கும் பகுதிக்கு சென்றார்கள். அப்போது அவர்களைப் பார்த்து மண்ணறையில் இருப்பவர்களே உங்களிடம் என்ன செய்தி இருக்கிறது? எங்களிடம் இருக்கிற செய்தி என்னவென்றால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள் பங்கு வைக்கப்பட்டு விட்டது. நீங்கள் கட்டிய வீடுகள் அது குடியமர்த்தப்பட்டு விட்டது. நீங்கள் விட்டுச்சென்ற மனைவிமார்கள் வேறு நபர்களால் மணமுடிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறி விட்டு அழுதார்கள். பின்பு அல்லாஹ்வின் மீது சத்தியமாக இங்கு இருப்பவர்களால் பதில் சொல்வதற்கு முடியுமானால் நிச்சயமாக நாங்கள் சிறந்த தயாரிப்பாக இருக்கிற இறையச்சத்தை பெற்றுக் கொண்டோம் என்று சொல்லியிருப்பார்கள் என்றார்கள்.

இறையச்சம் என்றால் என்னவென்பது பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு விதமான விளக்கங்களை கூறியிருந்தாலும் பெரும்பான்மையான இமாம்கள் கூறும் விளக்கம்

امتثال أوامر الله واجتناب النواهي فالمتقون هم الذين يراهم الله حيث أمرهم، ولا يقدمون على ما نهاهم عنه.

அல்லாஹ்வுடைய ஏவல்களுக்கு கட்டுப்படுவது, அவன் தடுத்த விஷயங்களை விட்டும் தவிர்ந்து நடப்பது.

அல்லாஹ் நம் அனைவருக்கும் இறையச்சம் எனும் மேலான சிறந்த பொக்கிஷத்தை வழங்கியருள் புரிவானாக... ஆமீன்